Monday, July 14, 2008

448. ரங்கராஜன் நம்பி - My 2 cents!

எனது முந்தைய பதிவில் அம்முவின் விமர்சனத்தின் தொடர்ச்சியாக, எனது சின்ன மகளிடம் (6 வயது), 'படம் பிடித்ததா?' என்று கேட்டேன். அவள், "படத்தில 2 கமல் தானே ... சயிண்டிஸ்ட் கமல், கோயில்ல சண்டை போடற கமல் .. வராங்க, மீதி கமல் எல்லாம் எங்கே போனாங்க?" என்று ஒரு சூப்பர் கேள்வி கேட்டாள் :) நான் மற்ற 8 வேடங்களில் கமல் வருவது பற்றி விவரித்தபோது, "மத்த கமல் எல்லாம் பார்க்க ஏம்பா கார்ட்டூன் மாதிரி இருக்காங்க?" என்று இன்னொரு கேள்வி கேட்கவே, நான் அப்பீட் :)

My 2 cents: இணையத்தில் பலவகையான விமர்சனங்களை வாசித்து விட்டதால், உலகத்தரமான படத்தை எல்லாம் எதிர்பார்த்துச் செல்லவில்லை என்ற டிஸ்கியோடு தொடங்குகிறேன்! தசா ஒரு நல்ல மசாலா படம் என்று நிச்சயம் கூறமுடியும். Real Good Entertainer ! "சிவாஜி" பெட்டரா, "தசா" பெட்டரா என்று (ரஜினி ரசிகனான) என்னிடம் கேட்டால், என் பதில் ... No comments;) இதே படம், ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட ஓர் ஆங்கிலப் படமாக இருந்திருந்தால், அதன் concept மற்றும் 10 வேடங்களுக்கு சிலாகிக்கப்பட்டிருக்கும், நமது அடிமை மெண்டாலிட்டி அப்படிப்பட்டது :(

பிரம்மாண்டத்தை பிரம்மாண்டத்துடன் ஒப்பிட வேண்டும்! அந்த வகையில் சங்கரின் பல குப்பைகளை (சிவாஜி, இந்தியன் தவிர!) விட, தசா பரவாயில்லை என்று தான் கூறுவேன். இப்படி ஒப்பிடுவதை விடுத்து, சுப்ரமணியபுரத்துடனும், பருத்தி வீரனுடனும் ஒப்பிடுவது சரியான அணுகுமுறை கிடையாது! கமலின் சிறந்த நடிப்பைப் பார்க்க பலப்பல உத்தமமான படங்கள் (ராஜபார்வை, மூன்றாம் பிறை, நாயகன், ஹேராம், தேவர் மகன், குணா, குருதிப்புனல், மகாநதி, தெனாலி, அன்பே சிவம் ...) நமக்காக காத்திருக்கின்றன. மேலும், இந்தப் படத்திற்கு இவ்வளவு பணத்தைக் கொட்டியிருக்க வேண்டுமா போன்ற கேள்விகளுக்குள் செல்வதில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை!

கமலின் நடிப்பு, குறிப்பாக பல்ராம் மற்றும் வின்செண்ட் வேடங்களில் சூப்பர். வின்செண்ட் பாத்திரப் படைப்பில் ஒரு எழவு (நுண்)அரசியலும் இருப்பதாகத் தோன்றவில்லை! பத்து வேடங்களும் வித்தியாசமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, மேக்கப் சற்று அத்து மீறியதில், ஒரு வித 'ஒட்ட வைத்த' செயற்கைத்தனம் இருந்தது உண்மை தான் என்றாலும், பாத்திரத்திற்கு ஏற்ற பேச்சு வழக்கை அனுசரிப்பதில் கமலுக்கு இணை யாரும் கிடையாது. ஒன்றுமே இல்லாத புஷ் வேடத்தில் கூட , புஷ்ஷின் சின்னச்சின்ன மேனரிஸங்களை வெளிக் கொணர்ந்ததில், கமலின் நுண்ணிய கவனமும், உழைப்பும் தெரிகிறது.

ஒப்பனையும், தொழில்நுட்பமும் வளராத காலகட்டத்தில், தனது நடிப்பால் மட்டுமே 9 வேடங்களிலும் வித்தியாசம் காட்டிய 'நவராத்திரி' சிவாஜி, ஞாபகத்திற்கு வந்தது என்னவோ உண்மை தான்! அது போலவே, கமல் தானே பத்து வேடங்களிலும் நடிக்காமல், சிலவற்றை தாரை வார்த்துக் கொடுத்திருந்தால், இவ்வளவு கடுமையான விமர்சனங்கள் வந்திருக்காது என்று நினைக்கிறேன்.

தசாவின் 12-ஆம் நூற்றாண்டுக் காட்சிகளின் பிரம்மாண்டம், ஆங்கிலப்படங்களுக்கு இணையானது. கமல் நாத்திகராக இருந்தாலும், தசாவின் பத்து வேடங்களில் ரங்கராஜன் நம்பி என்ற ஆத்திக வைணவர் வேடம் தான் அவருக்கு சிறப்பாகப் பொருந்துகிறது :) சாரு தனது விமர்சனத்தில், கோயிலில் இறைசேவை செய்யும் வைணவர் இப்படித்தான் புஜ பராக்கிரமத்துடன் இருந்திருப்பாரா என்று சந்தேகப்படுவது போல் படாமல் இருந்தால், அக்காட்சிகளை ரசிக்க முடியும்! பக்தி உணர்வு உள்ளவர்களுக்கு சிலிர்ப்பு தரும் காட்சிகள் அவை. கமல் "சாந்தாகாரம், புஜகசயனம் ..." என்று சொல்லும்போது எனக்கு மெய் சிலிர்த்தது!

வைணவத்தில், பரந்தாமனின் அடியாரைப் பணிவது, பரமனைப் பணிவதைக் காட்டிலும் உயர்ந்ததாகக் கூறப்படுகிறது! அந்த சிறிய விஷயத்தைக் கூட கவனத்தில் கொண்டு, ரங்கராஜ நம்பியை மூலவர் சிலையுடன் கட்டி கடலுக்கு இட்டுச் செல்லும்போது, பல்லாண்டு பாடும் வைணவர்கள், ஒருவர் தோள் மேல் ஒருவர் ஏறி, (மூலவரின் திருவடியைப் பற்றி வணங்காமல்!) ரங்கராஜன் நம்பியின் திருவடியைப் பற்றி வணங்குவதை காட்சியில் கொணர்ந்திருக்கும் செயல் வியப்பை வரவழைத்தது!

அதே சமயம், கேயாஸ் தியரி, பட்டர்ஃபிளை எஃபெக்ட் பற்றியெல்லாம சிந்திக்கக் கூட தமிழ் சினிமாவில் ஆள் இருக்கிறாரே என்று சாரு போலவெல்லாம என்னால் சிலாகிக்க முடியவில்லை;-)

தமிழ் கூறும் நல்லுலகில் உலவும் அறிவுஜீவிகள், கமர்ஷியலாக தோல்வி அடையும் படங்களை மட்டுமே "நல்ல" படங்கள் என்று ஒத்துக் கொள்வது, சிலாகித்துப் பேசுவதும் ஏன் என்று புரியவில்லை! கமர்ஷியலாக வெற்றி அடையும் திரைப்படங்களில் எந்த வகையிலும் நடிப்புக்கு scope-ஏ கிடையாது என்று மறுத்துப் பேசுவது சரியாகாது.

தசாவை தமிழ் சினிமாவின் மைல்கல் என்றெல்லாம் கூற மாட்டேன்! அதே நேரத்தில், தசா போன்ற திரைப்படங்களால் தமிழ் சினிமாவுக்கு பின்னடைவு / ஆபத்து என்று நண்பர் சுரேஷ் கண்ணனுக்கு இணையாக கெட்டிக்காரத்தனமாக வாதாட எனக்கு சரக்கு போதாது :)

எ.அ.பாலா

23 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

said...

//பத்து வேடங்களும் வித்தியாசமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, மேக்கப் சற்று அத்து மீறியதில், ஒரு வித 'ஒட்ட வைத்த' செயற்கைத்தனம் இருந்தது உண்மை தான் என்றாலும், பாத்திரத்திற்கு ஏற்ற பேச்சு வழக்கை அனுசரிப்பதில் கமலுக்கு இணை யாரும் கிடையாது. //
ditto.his voice variation is better than makeup.

கோயிலில் இறைசேவை செய்யும் வைணவர் இப்படித்தான் புஜ பராக்கிரமத்துடன் இருந்திருப்பாரா என்று சந்தேகப்படுவது போல் படாமல் இருந்தால், அக்காட்சிகளை ரசிக்க முடியும்
//ditto.
-aathirai

Kasi Arumugam said...

perfect!

பினாத்தல் சுரேஷ் said...

//தசாவை தமிழ் சினிமாவின் மைல்கல் என்றெல்லாம் கூற மாட்டேன்! அதே நேரத்தில், தசா போன்ற திரைப்படங்களால் தமிழ் சினிமாவுக்கு பின்னடைவு / ஆபத்து என்று நண்பர் சுரேஷ் கண்ணனுக்கு இணையாக கெட்டிக்காரத்தனமாக வாதாட எனக்கு சரக்கு போதாது :)//

சூப்பர்! அப்படியே என் நிலைப்பாடும் இதேதான்!

புருனோ Bruno said...

//தமிழ் கூறும் நல்லுலகில் உலவும் அறிவுஜீவிகள், கமர்ஷியலாக தோல்வி அடையும் படங்களை மட்டுமே "நல்ல" படங்கள் என்று ஒத்துக் கொள்வது, சிலாகித்துப் பேசுவதும் ஏன் என்று புரியவில்லை!//

எனக்கு பல வருடங்களாக இந்த சந்தேகம் உள்ளது.

வியாபார ரீதியாக வெற்றி பெரும் படங்கள் ஏன் பரிசு வாங்குவது இல்லை
// கமர்ஷியலாக வெற்றி அடையும் திரைப்படங்களில் எந்த வகையிலும் நடிப்புக்கு scope-ஏ கிடையாது என்று மறுத்துப் பேசுவது சரியாகாது.//

ஆம்

enRenRum-anbudan.BALA said...

காசி,
ஒரு வார்த்தை பாராட்டுக்கு நன்றி :)

enRenRum-anbudan.BALA said...

ஆதிரை,
சினிமாவை சினிமாவா பார்க்கணுமா, வேண்டாமா ? :)

enRenRum-anbudan.BALA said...

சுரேஷ்,
So, நீங்க எனக்கு ஆதரவாளர், விமர்சன மேட்டர்ல, நன்றி :)

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

புருனோ,
நன்றி.

**********************
//தமிழ் கூறும் நல்லுலகில் உலவும் அறிவுஜீவிகள், கமர்ஷியலாக தோல்வி அடையும் படங்களை மட்டுமே "நல்ல" படங்கள் என்று ஒத்துக் கொள்வது, சிலாகித்துப் பேசுவதும் ஏன் என்று புரியவில்லை!//

எனக்கு பல வருடங்களாக இந்த சந்தேகம் உள்ளது.
***********************
நாமெல்லாம் பாமரர்கள், அதனாலே புரியாது போல இருக்கு ;-)

said...

பரவாயில்ல உங்க ரெவ்யு

ilavanji said...

// கோயிலில் இறைசேவை செய்யும் வைணவர் இப்படித்தான் புஜ பராக்கிரமத்துடன் இருந்திருப்பாரா என்று சந்தேகப்படுவது போல் படாமல் இருந்தால் //

பாலா,

என் புரிதல்களில் இருந்து...

முகலாயரின் மதமாற்றத்தில் இருந்து ராமானுஜர் இந்து மதத்தைக் காப்பதற்காக நாலு வர்ணங்களான மக்களில் இருந்து பலபேரை வைணவர்களாக மாற்றியிருக்கிறார். (மாற்றப்பட்டவர்கள் அனைவரும் பிராமணர்கள் ஆனார்களா என்பது என் சந்தேகம்! ) அப்படி மாற்றப்பட்டவர்களில் ஒருவராக ராமானுஜ நம்பி இருந்து அவர் மீனவக்குலத்தில் இருந்தோ வேளாளர் குலத்தில் இருந்தோ வந்திருந்தால் இப்படி புஜ பராக்கிரமத்துடன் இருந்திருக்க முடியாதா?!

மேலும் எம்பார் ஒரு பாடலில் ராமானுஜரே ஆறடி உயறமும் அகண்ட தோள்களும் சிவந்த மேனியும் உடையவர் என பாடியிருக்கிறாராமே! அப்படியிருக்கையில் ராமானுஜ நம்பி மட்டும் புஜபலத்துடன் இருந்திருக்க முடியாதா?

இன்னொன்று, வடகலை தென் கலை பிரிவுகளே 200 வருடங்களுக்கு முன்னால்தான் உண்டானது. அதுவரை Y தான் நாமம். வடகலையாக பிரிந்தவர்கள் கடந்த 200 வருடங்களாக உபயோகிப்பதே U! அப்படியிருக்கையில் ராமானுஜ நம்பி தென்கலை நாமம் போட்டு படத்தில் வடகலைக்காரர்களுக்கு ஆப்படித்திருப்பதாக ஒரு வடகலை இட்லிவடையில் எழுதியிருப்பதை படித்தேன். அதுவும் தவறுதானே?

தவறான தகவல்கள் இருப்பின் தெரிவிக்கவும்.. :)

ச.சங்கர் said...

//தசாவை தமிழ் சினிமாவின் மைல்கல் என்றெல்லாம் கூற மாட்டேன்! அதே நேரத்தில், தசா போன்ற திரைப்படங்களால் தமிழ் சினிமாவுக்கு பின்னடைவு / ஆபத்து என்று நண்பர் சுரேஷ் கண்ணனுக்கு இணையாக கெட்டிக்காரத்தனமாக வாதாட எனக்கு சரக்கு போதாது ///

என்ன சொல்ல வருகிறாய்? இப்படியும் அல்லாத அப்படியும் அல்லாத ஒரு நடுவாந்திரமான சாதாரண தமிழ் படம் என்றா ? :)

எனக்கு என்ன தோணுதுன்னா..முதலில் ர + ந வை கடலில் இறக்குவதையும்,சுனாமியையும் வைத்துக் கொண்டு நடுவில் நல்ல கதை சொல்லியிருக்கலாம் . க்ளைவ் கஸ்லர் பாணியில் பெருமாள் சிலையைத் தேடுவதையே கூட கதையாக சொல்லி சுனாமியில் முடித்திருக்கலாம்...
தேடிட்டு போர கப்பல்ல அட்டகாசமா அசின் கூட ரெண்டு டூயட்டு, வில்லன்கள் கூட ஒரு கப்பல் சேஸ், மல்லி கூட ( அதாங்க மல்லிகா செராவட்டு) கூட அண்டர் வாட்டர் கமலஹாசன் ஸ்பெசல் லிப் டு லிப்புன்னு எவ்வளவோ ஐட்டம் கவர் பண்ணியிருக்கலாம்...ஹும்..எல்லாப் போச்...கயாஸ் தியரியாம்..கயாஸ் தியரி..போங்கப்பா

dondu(#11168674346665545885) said...

ரங்கராஜன் நம்பி பெருமாளை ஏளப்பண்ணுகிறவர்களில் ஒருவராக இருந்திருக்கலாம். அப்போது ஆஜானுபாகுவாக இருப்பது ஆச்சரியமே அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//ஆதிரை,
சினிமாவை சினிமாவா பார்க்கணுமா, வேண்டாமா ? :)
//
padathai enjoy pannaamal over araichi seibavargaluku thaniya oru phd kudukalam.
-aathirai

enRenRum-anbudan.BALA said...

இளவஞ்சி,

//அப்படி மாற்றப்பட்டவர்களில் ஒருவராக ராமானுஜ நம்பி இருந்து அவர் மீனவக்குலத்தில் இருந்தோ வேளாளர் குலத்தில் இருந்தோ வந்திருந்தால் இப்படி புஜ பராக்கிரமத்துடன் இருந்திருக்க முடியாதா?!
//
இருந்திருக்க நிச்சயம் வாய்ப்புள்ளது, அதுவும் கமல் "கடல் மீன்கள்" கதாநாயகன் ஆயிற்றே ;-)

//வடகலை தென் கலை பிரிவுகளே 200 வருடங்களுக்கு முன்னால்தான் உண்டானது. அதுவரை Y தான் நாமம். வடகலையாக பிரிந்தவர்கள் கடந்த 200 வருடங்களாக உபயோகிப்பதே U! அப்படியிருக்கையில் ராமானுஜ நம்பி தென்கலை நாமம் போட்டு படத்தில் வடகலைக்காரர்களுக்கு ஆப்படித்திருப்பதாக ஒரு வடகலை இட்லிவடையில் எழுதியிருப்பதை படித்தேன். அதுவும் தவறுதானே?
//
200 வருடங்கள் என்று வரையறுக்க முடியாது. இருந்தாலும், ராமானுஜர் காலத்திற்குப் பின்னால் (தேசிகன், மணவாளமாமுனிகள் காலங்களுக்கும் பின்னால்!) தான் தென்கலை, வடகலை என்று பிரிவுகள் ஏற்பட்டன.

இட்லிவடையில் கமெண்ட் போட்ட ஆளுக்கு என்ன கடுப்போ, நானறியேன் :) கமல் தென்கலையாக இருப்பதால் அப்படிப் போட்டிருக்கலாம் (சுஜாதாவும் தென்கலை தான்) என்று நினைக்கிறேன் ;-) சற்றே சீரியஸாக, இந்தக் காலத்தில் வடகலை, தென்கலை என்று பேசுவதெல்லாம் டூ மச் !

//தவறான தகவல்கள் இருப்பின் தெரிவிக்கவும்.. :)//
ஐயா, உங்களை எவ்வளவு நாட்களாகத் தெரியும், நீங்களாவது மிஸ்டேக் செய்வதாவது ? :)

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

இளவஞ்சி,
வடகலை மற்றும் தென்கலை பற்றி கொஞ்சம் உபரி தகவல், உங்களுக்காக:

1. வடகலை சம்பிரதாயத்தில், ஜீவாத்மாவானது (பரமாத்விடம்) சரணாகதி அடைவதற்கான
வழிமுறைகளை கடைபிடிப்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, முக்தி அடைய ஜீவாத்மாவின்
'முயற்சி' அவசியம் என்பது சொல்லப்பட்டுள்ளது.
தென்கலை சம்பிரதாயம், 'சரணாகதி' என்பதையே ஒப்புக்கொள்வதில்லை, ஏனெனில், ஜீவாத்மா
என்பது சதாசர்வ காலமும் பரமாத்வின் கட்டுக்குள் இருப்பதால், பரமாத்மாவானது தனது
'விருப்பத்தின்' பேரில், ஒரு ஜீவாத்மாவுக்கு முக்தி அளித்து காக்க இயலுமே அன்றி, ஜீவாத்மா
தானாக 'சரணாகதி'யை மேற்கொள்ளும் திறம் படைத்தது கிடையாது !

2. வடகலையார், திருமகளை பரமாத்ம சொரூபமாக (திருமாலுக்கு இணையாக) பார்க்கின்றனர்.
தென்கலையார், திருமகளை ஜீவாத்மாகவே (அதே சமயம், திருமாலிடம் பரிந்துரைக்கும் சக்தி
கொண்டவராக!) பார்க்கின்றனர்.

3. வடகலையார் (தென்கலையாரை விடவும்!) சந்தியாவந்தனம் போன்ற நித்ய அனுஷ்டானங்களை
கடைபிடிக்கும் அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.

4. பரமாத்மா, ஜீவாத்மாக்களின் துயரைக் கண்டு வருந்துவதில்லை (ஏனெனில், அவற்றின் துயர்
துடைக்கும் திறன் பரமனிடம் இருப்பதால், அவர் வருத்தம் அடைய வேண்டிய அவசியமில்லை!)
என்பது வடகலையார் நம்பிக்கை. தென்கலையார், ஜீவாத்மாக்களின் துயரைக் கண்டு (ஸ்ரீராமர்
போல) பரமாத்மா மனம் வருந்துவதாகவே நம்புகின்றனர்.

5. தென்கலையார் ஆழ்வார், பிரபந்தத்திற்கு முக்கியத்துவம் அளிப்பர். வடகலையார் வேதத்திற்கு.

6. வைணவரில் பார்ப்பனர் அல்லாதவர், தென்கலையாராகவே பார்க்கப்படுகிறார்கள். அவர்களும்
தென்கலை நாமமே இட்டுக் கொள்வர் !

இதுக்கு மேல ஏதாவது சந்தேகம் இருந்தா, என் கிட்ட வராதீங்க :)

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

சங்கர்,
கருத்துக்கு நன்றி. நீ சொல்றபடி கதை அமைச்சிருந்தா, படம் இன்னும் சூப்பரா வந்திருக்கும் என்று தான் எனக்கும் தோன்றுகிறது :) படத்தின் ஆரம்பத்தில் கப்பல் வருவதால், படத்தை "pirates of the caribbean" போல சூப்பரா எடுத்திருக்கலாம் !

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

ஆதிரை,
மீள்வருகைக்கு நன்றி. படத்தை ஆராயாம் என்சாய் பண்ணணும் :)

ராகவன் சார்,
கருத்துக்கு நன்றி. "ஏளப் பண்ணுகிறவர்கள்" என்ற சொற்பிரயோகம் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை
! என்னவென்று நீங்களே விளக்கி விடுங்களேன் :)

dondu(#11168674346665545885) said...

வைணவக் கோவில்களில் உற்சவரை பல்லக்குடன் தோளில் சுமந்து செல்வதுதான் ஏளப்பண்ணுவது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

Healthy exchange of informations and excellent articles.Keep it up. All the best.

Gct'ian Senthilkumar - Bala's Batchmate,
Higher college of Technology,Muscat.

enRenRum-anbudan.BALA said...

//Healthy exchange of informations and excellent articles.Keep it up. All the best.

Gct'ian Senthilkumar - Bala's Batchmate,
Higher college of Technology,Muscat.
//
Thanks, Prof. Senthil :)

maithriim said...

அவர் என்னதான் தன்னை நாத்திகர் என்று பிரகடனப் படுத்திக் கொண்டாலும் அவரின் சமஸ்கிருத உச்சரிப்பிலும் பெருமாளின் திருவடிகளை அழுத்தித் தொட்டு வணங்குவதிலும் அவரின் உடலில் ஓடுவது வைணவ இரத்தம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

amas32

maithriim said...

அவர் என்னதான் தன்னை நாத்திகர் என்று பிரகடனப் படுத்திக் கொண்டாலும் அவரின் சமஸ்கிருத உச்சரிப்பிலும் பெருமாளின் திருவடிகளை அழுத்தித் தொட்டு வணங்குவதிலும் அவரின் உடலில் ஓடுவது வைணவ இரத்தம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

amas32

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails